சனி, 28 டிசம்பர், 2013

கடலை மாவு சட்னி

கடலை மாவு சட்னியை வெங்காயம், தக்காளி, கடலை மாவு இருந்தா ரொம்ப ஈசியா செஞ்சிடலாம். ஆனா, ருசியில இத அடிச்சிக்க முடியாது! இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகிய ஐட்டங்களுக்கும் பொருத்தமா இருக்கும்.

நீங்களும் செஞ்சு பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
சிவப்பு மிளகாய்த் தூள் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டி



செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் லேசாக வதங்கியவுடன், தக்காளி சேர்த்து வதக்கி, பின் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். கடலை மாவைச் சேர்த்து கட்டிகள் இல்லாமல் சிறு தீயில் வைத்து நன்றாக வதக்கவும். கடலை மாவின் பச்சை வாசனை போனவுடன், 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொதிக்க விடவும். கடலை மாவு வெந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
மிகவும் எளிதாக செய்யக் கூடிய இந்த கடலை மாவு சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்து வகை டிபன் வகைகளுக்கும் ஏற்ற சட்னி!


2 கருத்துகள்:

  1. எங்கள் வீட்டில் நேற்று கடலை மாவு சட்னி உங்கள் செய்முறையின் படி. மிக நன்றாக இருந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு